Header Ads

test

இலங்கையிலிருந்து தந்தையை திரும்ப அழைத்துவர மதுரை நீதிமன்றில் மகள் ஆட்கொணர்வு மனு தாக்கல்

இலங்கையில் வயது முதிர்ந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவரின் மகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதியரசர்கள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கில் மத்திய வெளியுறவுத்துறைச் செயலர், தமிழக உள்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 14 வரை  ஒத்திவைப்பதாக நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
23 ஆண்டுகளுக்கு முன் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்ததாகக் கருதப்பட்ட மீனவர் இலங்கையில் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் வெளியுறத்துறைச் செயலாளர் மற்றும் தமிழக உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பரதன். இவரது மனைவி சரசு. இவர்களுக்கு சரவணசுந்தரி, முத்துலட்சுமி என்ற இரு மகள்களும், மாரி என்ற மகனும் உள்ளனர்.
மீன்பிடித் தொழிலாளியான பரதன் கடந்த 1996-ம் ஆண்டு 4 பேருடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். அவர்கள் சென்ற படகு நடுக்கடலில் விபத்தில் சிக்கியதில் பரதன் மாயமானார்.
நீண்ட நாள்களாக தேடியும் பரதன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்திருப்பார் என உறவினர்கள் நினைத்திருந்தனர். மீன் வளத்துறைப் பதிவேட்டிலும் அவ்வாறே பதிவாகி இருந்தது.
23 ஆண்டுகளில், அவரின் 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் பரதனின் குடும்பத்தினர் செல்போனில், இலங்கையில் பிச்சைக்காரர்களின் நிலை குறித்த வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளனர். அதில் பிச்சைக்காரர்களின் வரிசையில் பரதனை போன்ற ஒருவர் இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பரதனின் பழைய படமும், வீடியோவில் வந்த நபரின் உருவமும் ஒற்றுமையாக உள்ளதால் அவர் உயிருடன் இருப்பதை உறுதியாக நம்புகிறோம். அவருடைய மனைவி சரசு தற்போது மனநிலை சரியில்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரிடம் கணவரை அடையாளம் காட்டுமாறு கூற முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் பரதனை மீட்டு கொண்டுவரக் கோரி இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, இலங்கையில் வயது முதிர்ந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவரின் மகள் சரவண சுந்தரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட் கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments