Header Ads

test

ஒருபுறம் குப்பைக்கிடங்கு:ஆடி அமாவாசை பிதிர்கடன் இன்று!


தமிழரசின் குப்பைக்கூடையாக்கப்படும் வலி. வடக்கு கீரிமலை பகுதியில் இன்று இந்துக்களின் பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆடி அமாவாசை தினமான இன்று  இந்துக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மறைந்த தமது உறவுகளிற்கு பிதிர்க்கடன் நிறைவேற்றியிருந்தனர்.

இப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுகாதார கழிவுகளின் நில நிரவுகை திட்டம் அப்பகுதியில் புனிதத் தன்மையையும் எதிர்கால அபிவிருத்தியையும் சிதைக்கும் திட்டம் என்று யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் செல்வராஜா இரவீந்திரன் நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.

யாழ். மாவட்டத்தின் பாரிய அளவில் எழுந்துள்ள குப்பை பிரச்சினைக்கான தீர்வு ஒன்று தேவைப்படும் அவசியம் உள்ள போதும், புனிதத் தன்மையும், வடக்கின் அபிவிருத்தியின் கேந்திர முக்கியத்துவமான இடமாக உள்ள கீரிமலை பகுதி இத்திட்டத்திற்கான தெரிவு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமற்ற செயற்பாடாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

வலி. வடக்கு கீரிமலைப் பகுதியில் நடமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் சுகாதார நில நிரவுகை திட்டம் ஆகும். இத்திட்டத்தின் ஊடாக யாழில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகளினால் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்காக சுன்னாம்புக் கல் அகழ்வின் போது உருவான பாரிய பள்ளத்தில் கொட்டி நிரவும் திட்டமாகும். 

நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லாமல் நிலத்தின் கீழ் மொத்த பொலுத்தீன் பரவப்பட்டு குப்பைகள் போடப்படும். இருப்பினும் அந்த குப்பை கிடங்குகள் நிரவுவதற்கு சுமார் 25 தொடக்கம் 30 வருட காலம் எடுக்கும். 

இந்த காலப்பகுதிக்குள் அந்த குப்பைகளை நாடி வரும் பறவைகள், விலங்குகளால் ஏற்படப்போகும் சுகாதார சீர்கேடுகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். இதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 5 ஆலயங்கள், சித்தர்களின் சமாதிகள் போன்றவற்றின் புனிதத் தன்மையினையும் இல்லாமல் செய்துவிடும். 

குப்பை கிடங்கின் ஊடாக வெளிவரும் துர்நாற்றம் அந்த பகுதியில் மக்கள் அமைதியான முறையிலும், சுகாதார முறையில் வாழ்வதற்கு தடையாக அமையும். 

எதிர்காலத்தில் வலி. வடக்கில் வரப்போகும் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறை முகங்களால் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படப்போகும் அபிவிருத்திக்கு இத்திட்டம் தடையாக மாறும். 

இவ்வாறான நிலையில் இராணுவத்தின் ஆழுகைக்குள் இருக்கும் பகுதி ஊடாக எவ்வாறான குப்பைகள் அங்கு கொண்டுவந்து கொட்டப்படப் போகின்றன என்பதை சாதாரணமானவர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையே அங்கு காணப்படும். 

தற்போதும் வெளிநாட்டில் இருந்து 110 கொன்டேயினரில் மருத்துவ கழிவு அடங்கிய குப்பைகள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அவற்றில் சில யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இராணுவ உயர் பாதுகாப்பு பகுதியினையும் இணைத்து நடமுறைப்படுத்தப்படும் இந்த சுகாதார நில நிரவுகை திட்டம் எவ்வாறு உரிய நியம நிதிப்படி நடக்கும் என்று யாராலும் உறுதிபட தெரிவிக்க முடியாது. 

இதுமட்டுமல்லாமல் குப்பை கொட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு மிக அருகில் கடல் உள்ளது. மழை காலத்தில் அல்லது புயல் வீசும் சந்தர்ப்பங்களில் கடல் நீர் உட்புகுமாயின் அது பெரும் சுகாதார சீர்கேட்டினை அங்கு ஏற்படுத்தும். 

யாழ். மாவட்டத்தினை பொறுத்தவரையில் குப்பை பெரும் பிரச்சினையாக உள்ள போதும், இதனை கொட்டுவதற்கு ஒரு பொருத்தமான இடம் தேவை என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. 

ஆனால் குப்பை கொட்டுவதற்கு கீரிமலை பகுதி தெரிவு செய்யப்பட்டதே இங்கு எழுந்துள்ள பிரச்சினையாகும். இத்திட்டத்தினை நடமுறைப்படுத்துவதற்கு தென்மராட்சி மற்றும் பூநகரி பகுதிகளில் தகுந்த இடம் உண்டு. இது தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றினை நியமித்து தீர்க்கமான முடிவினை எடுக்க முடியும்.

ஆனால் இத்திட்டம் தென்கொரிய நாட்டின் உதவியுடன் இங்கு அவசர அவசரமாக நடமுறைப்படுத்தப்பட்டு தற்போது கேள்வி கோரும் நிலையில் உள்ளது. 

எனவே கீரிமலைப் பகுதியில் இத்திட்டம் நடமுறைப்படுத்துவதன் தார்பரியத்தை புரிந்து கொண்டு அனைவரும் நடக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

No comments