Header Ads

test

கோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்?


கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என
சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இத்தகைய முயற்சியை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் படையினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது..

கொரோனோ தாக்கம் சடுதியாக இலங்கையில் அதிகரித்து வருகிறது. அதற்கமைய கொரோனோ சந்தேகத்தில் பலரும் பல இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. உண்மையில் தனிமைப்படுத்தல் நிலையமாக அந்தக் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயற்பாடாகவே கருதப்படுகிறது. ஆகையினால் இந்த முயற்சியை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோருகின்றோம்.

குறிப்பாக கல்விச் சாலைகளை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் போவதில்லை என அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்தக் கல்விச்சாலைகளையே பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஆகையினால் அரசு தான் முன்னர் கூறியதனையே தற்போது தானே மீறி வருகின்றது.

அதிலும் விசேசமாக பொது மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பிரதேசத்திலேயே கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி அமைந்துள்ளது. இவ்வாறு மக்கள் மிக நெருக்கமாக வாழ்கின்ற அந்தப் பிரதேசத்தில் கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. 

இருந்தும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளில் இவ்வாறான தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதை அரசு தவிர்க்க வேண்டும். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு தேசிய கல்வியற் கல்லூரியாக இந்தக் கல்லூரியே அமைந்திருக்கின்றது. இங்கிருந்தே பல ஆசிரியர்கள் உருவாக்கப்படுகின்றனர். ஆகையினால் அதற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசின் செயற்பாடுகள் அமையக் கூடாது.

இவ்வாறு மக்கள் நெரில் மிகுந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதே வேளையில் எதிர்காலத்தில் இத்தகைய கல்லூரிக்கு மாணவர்கள் வருவதற்கு அச்சப்படுகின்ற நிலைமையும் ஏற்படும். அது மாத்திரமல்லாமல் நீண்ட காலத்திற்கு அந்த இடங்களைப் பாவிப்பதற்கு பலரும் அஞ்சுகின்ற நிலைமையும் உருவாகும்.

ஆகையினால் இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக தேசிய கல்வியற் கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.  எனவே இங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோருகின்றொம்.

அதே நேரம் மக்கள் செறிவு குறைந்த இடங்களில் அவ்வாறான முகாம்களை அமைக்கலாம். அதனை விடுத்து மக்கள் செறிவான இடங்களில் இத்தகைய நிலையங்களை அமைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளார். எனவே இந்த விடயங்கள் குறித்து ஐனாதிபதி உரிய கவனம் செலுத்தி சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments