Header Ads

test

உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்!

இலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் துறையின் தலைவருமான கலாநிதி சி.ரகுராமின் 'உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்' என்ற நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. 
நமது ஈழநாடு நாளிதழின் கலாநிதி சி.ரகுராம் ஆசிரியராக இருந்த காலப் பகுதியில் எழுதிய ஆசிரியர் தலையங்களின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட குறித்த நூலே இதன் போது வெளியிட்டு வைக்கப்பட்டது. 
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக நூலக கருத்தரங்கு மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.நிக்ஸன் தலைமையில் நடைபெற்ற இந்நூல் அறிமுக நிகழ்வு, கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து கொல்லப்பட்ட நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளராக இருந்த சிவமகாராஜாவின் உருவப் படத்திற்கு சுடரேற்றி அவரது சகோதரி அஞ்சலிக்க மலர் மாலையை ஆறுதிருமுருகன் அணிவித்தும், அஞ்சலி செலுத்தப்பட்டது. 
தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் ராதேயன் நூலினை வெளியிட்டு வைக்க அந்நூலின் முதல் பிரதியை யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி பெற்றுக் கொண்டார். 
இந்நிகழ்வில் அறிமுக உரையினை யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கே.ரி.கனேசலிங்கமும், யாழ்.ஊடக அமையத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஆ.சபேஸ்வரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்வின் ஏற்புரையினை நூலாசிரியர் கலாநிதி சி.ரகுராம் வழங்கினார். 
மேலும் இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறுதிருமுருகன், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள் ,யாழ்.தினக்குரல் பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளர் எஸ்.கேசவராஜா, வலம்புரி பத்திரிகை ஆசிரியர் ந.விஜயசுந்தரம், மத தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கணேஸ் வேலாயுதம், ஊடக கற்கை பயிலும் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments