Header Ads

test

மூடப்படும் நிலையில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை!


யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மேலதிக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் அரச வைத்தியர்கள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலைக்கு உரிய முறையில் வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை. அங்கு நீண்ட காலம் சேவையில் உள்ளவர்களுக்கும் உரிய காலப்பகுதிக்குள் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. 

இதனால் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இது மோசமான நிலையாகும். 

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவித்தும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. 

இருப்பினும் இதுவரை நோயாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாதவாறு அங்குள்ள சொற்ப வைத்தியர்களால் சேவை வழங்கப்படுகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் இறுதியாக எமது தாய் சங்கத்தின் ஊடாக பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கும், மத்திய சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம். இதனால் சில நடவடிக்கைகள் தற்போது நடக்கின்றது. 
குறிப்பாக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலைக்கு இடமாற்றத்தில் யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் கிளிநொச்சி வைத்திய சாலையில் இருந்து வர வேண்டியவர்களை வரவைப்பதாக அவ்வைத்தியசாலை பொறுப்பதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இருப்பினும் வைத்திய சாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரைக்கும் கால அவகாசம் கொடுத்துள்ளோம். 

அதற்கிடையில் வைத்தியர் தேவை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தினை நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போராட்டத்திற்கும் உரிய பலன் கிடைக்காவிட்டால் மேலதிக நடவடிக்கைகளில் குதிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments