டெனீஸ்வரன் விவகாரம் - எதிர்மனுத் தாக்கல் செய்ய முதலமைச்சருக்கு கால அவகாசம்


வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்மை நீக்கியதற்கு எதிராக, டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீது, அளிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, முதலமைச்சர் தரப்புக்கு இந்த கால அவகாசத்தை அளித்து நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

அத்துடன், டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து  நீக்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்திப் பிறப்பித்த உத்தரவையும், ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நீதியரசர்கள் நீடித்துள்ளனர்.

அதேவேளை, நேற்றைய விசாரணையின் போது, டெனீஸ்வரன் சார்பில் முன்னிலையான சட்டவாளர் சுரேன் பெர்னான்டோ, மேல்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக, தெரிவித்தார்.

இதற்கிடையே, மேல்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முதலமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment