Header Ads

test

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்


அதிகரிக்கப்பட்ட எரிபொருள் உயர்வுக்கு ஏற்றவாறு கோரிக்கை விடுத்த அளவு பேருந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
 
இதில் திருப்திகொள்ளாத நிலையிலேயே, தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.
 
அமைச்சரவை அனுமதி வழங்கிய பேருந்து கட்டண உயர்வு நியாயமானதல்ல என தனியார் பேருந்து சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
 
இந்த நிலையில், 15 முதல் 20 சதவீத கட்டண அதிகரிப்பை அந்த சங்கத்தினர் கோரி, இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
அத்துடன், ஆகக் குறைந்த கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்கக் கோரியும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
அனைத்து மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்த குமார, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கதின் தலைவர் கெமுனு விஜேரத்ன மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியஞ்சித் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
 
இன்றையதினம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரை போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
 
எனினும் அவர்கள் இந்த வாய்ப்பை நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
எனினும், அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
 
ஆரம்பக்கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என்றும், அதனையடுத்து அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

No comments