முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் தொடக்கம், சாலை வரையான வீதியினை, முழுமையாகப் புனரமைத்துத் தருமாறு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீள் குடியேற்றத்தின் பின்னர், இக்கிராமத்திற்கான பஸ் சேவைகள் கூட இடம்பெறாத நிலையில், இக்கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கப்பட்டு வருவதாகவும், இதேவேளை, பஸ் சேவை இடம்பெறாமைக்கு, புனரமைக்கப்படாத வீதியே காரணமெனவும், அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw3zUYvyEHS6-jGLG21Nxf08nVNf5oMwJkf35tACiJBVyWuBzuL4B1AP0tvCoN0fDBdH8vASuVvsuhswjS4nl3pGQVgYzuMFRKSt4aQmAQpwKW-lChzS4BkvN7Rgil9UcdxKKQlt_Pjzrk/s1600/625.500.560.350.160.300.053.800.900.160.90-7-696x387.jpg)
இந்நிலையில், வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் நிதி உதவியில், ஒரு கிலோ மீற்றர் வரையான வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த வீதியானது, முழுமையாக புனரமைக்கப்படும்போதுதான், முல்லைத்தீவு நகரத்திற்கோ, புதுக்குடியிருப்பு நகரத்திற்கோ, மக்கள் செல்லக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இக்கிராமங்களைச் சேர்ந்த, ஐந்நூறு வரையான குடும்பங்கள், பஸ் சேவைகள் இடம் பெறாததன் காரணமாக, முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிற்குச் செல்வதற்குக் கூட, நடந்தே செல்ல வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியதோடு, இரட்டைவாய்க்கால் தொடக்கம், சாலை வரையான வீதியை, முழுமையாகப் புனரமைப்பதன் மூலம், தம் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் கூட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரங்களுக்குச் சென்றுவருவதில் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment