Header Ads

test

இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலம் நிறைவேற்றம்


இழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 16 மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் வகையில், நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் ஒரு கட்டமாக இந்தப் பணியகம் உருவாக்கப்படவுள்ளது.

போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தப் பணியகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, கூட்டு எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இழப்பீடுகளுக்கான பணியக சட்டமூலத்துக்கு ஆதரவாக, 59 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 43 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் 16 மேலதிக வாக்குகளால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டு எதிரணியின் உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியினரும், இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.ஜேவிபி உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

No comments