Header Ads

test

ரணில் தலைக்கு மீண்டும் கண்டம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.
அந்தவகையில் குறித்த தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
வரவு – செலவுத்திட்ட காலப்பகுதியென்பது அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த காலப்பகுதி என்பதால் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இதன்போது ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மேற்படி யோசனையின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்  ஆறுமுகன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா, நாடாளுன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் உள்ளடங்கலான ஐவரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரமளவில் இக்குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments