Header Ads

test

பூட்டான் சென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு வரவேற்பு!


இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டு பூட்டானில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றித் தாயகம் திரும்பிய பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகளுக்கு யாழ்.நகரில் இன்று (14) மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. 
தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்டப் போட்டிக்கு இலங்கை தேசிய மகளிர் அணி தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 23 பேர்கொண்ட தேசிய அணியில் வடக்கு மாகாணத்தில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு தமிழ் வீராங்கனைகள் இடம்பெற்றனர்.
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா, ர.கிருசாந்தினி மற்றும் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மாணவிகளான எஸ்.தவப்பிரியா, யு.ஜோகிதா, ஜெ.ஜெதுன்சிகா ஆகியோர் மேற்படி அணியில் இடம்பெற்றனர். 

கடந்த வாரம் பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற போட்டிகளில் இந்திய மற்றும் பூட்டான் அணிகளுடன் இவர்கள் விளையாடினர். 
போட்டிகள் முடிவடைந்து தாயகம் திரும்பிய பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகளில் ஒருவர் கொழும்பில் தங்கிநின்ற நிலையில் சாந்தை பண்டத்தரிப்பைச் சேர்ந்த பா.செயந்தினி, மாதகலைச் சேர்ந்த ஏ.டி.மேரி கொன்சிகா ஆகியோர் இன்று பிற்பகல் 5 மணியளவில்  யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தனர். இவர்களுக்கு சாந்தையில் உள்ள சமூகமட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்.நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. 

டென்மார்க் டெமக்கிரட்டிவ் கட்சியின் உறுப்பினரும் டென்மார்க் உயர்நீதிமன்ற ஜீரருமான தருமன் தருமகுலசிங்கம் வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து சாந்தை விநாயகர் சனசமூக நிலையத் தலைவர் அ.பாலச்சந்திரன், விநாயகர் விளையாட்டுக் கழகத் தலைவர் ந.ரசிகரன், வெண்கரம் செயற்பாட்டாளர்களான மு.கோமகன், ந.பொன்ராசா ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வரை அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் பாண்ட் இசையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரதேச மக்கள் மலர் மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர். 

No comments