Header Ads

test

விடுவிக்கப்பட்ட நிலங்களில் மக்கள் குடியேறாமைக்கு அரச படைகளே காரணம்

காணி விடுவிக்கப்பட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டபோதும் படையினர் வசமிருந்து விடுவிக்கப்படாத காணிகளிலும் படை முகாம்களிற்கு அருகில் உள்ள காணிகளில் குடியேறுவது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதிய இடங்களிலுமே மக்கள் இன்னமும் மீளக் குடியேறவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட காணிகளில்கூட பல மக்கள் திரும்பப் போய்க் குடியிருக்கவில்லை என வெளிநாட்டமைச்சர் திலக் மாரபன தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்தபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சரது ஊடகப்பிரிவினரால் வெளியிடப்பட்டள்ள அறிக்கையில்,

“வெளிநாட்டமைச்சர் கௌரவ திலக் மாரபன அவர்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்த்தன அவர்களுடன் வடமாகாண முதலமைச்சர் கௌரவ க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சேர்ந்து கச்சேரியில் இன்று மதியமளவில் ஒரு விசேட கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். கூட்டத்தைக் கூட்டுமாறு அரசாங்க அதிபருக்கு கௌரவ திலக் மாரபன அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.

கூட்டத் தொடக்கத்தில் கௌரவ மாரபன அவர்கள் கூட்டத்தின் காரணத்தை அறிவித்தார். தான் அண்மையில் ஃப்ரசல்ஸ் (Brussels) சென்றிருந்ததாகவும் வடமாகாணத்தில் காணிகள் திருப்பிக் கொடுப்பது ஆமை வேகத்தில் செல்வதாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளில்கூட பல மக்கள் திரும்பப் போய்க் குடியிருக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதாக அமைச்சர் அறிவித்து அது சம்பந்தமான உண்மையினை அறியவே தான்  வடமாகாணம் வந்ததாக அறிவித்தார்.

அரசாங்க அதிபரிடம் இது பற்றிக் கேட்டார். விடுவித்த காணிகளில் எல்லாம் மக்கள் மீள்குடியேறியதாக திரு.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அதை மறுத்த முதலமைச்சர் அவர்கள், பல காரணங்களால் மக்கள் மீள் குடியேறவில்லை என்பதை எடுத்துரைத்தார்.
1. காணிகள் கிடைத்தும் வீட்டுத்திட்டம் தமக்குக் கிடைக்காததால் வீடு கட்ட முடியாமல் காணியில் குடியேறாமை.
2. காணிகளுக்கு அருகில் இராணுவம் குடிகொண்டிருப்பதால் தமது காணிகளில் மீள்குடியேற முடியாத நிலை.
3. விடுவித்தும் சில காணிகளை இராணுவம் விட்டு எகாத படியால் குடியேற முடியாமை.
போன்ற காரணங்களைக் கூறி ஒவ்வொரு காணிக்காரரிடமும் இது பற்றி அறிந்து கொண்ட பின்னர்தான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

அடுத்து 82மூ காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் கூறியதை மறுத்து 2009ல் இருந்து இந்த விபரங்கள் தரப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி 2013ல் இருந்தே நாம் விடுவிக்கப்பட்ட காணி பற்றி பேச வேண்டும் என்று கூட்டத்தில் கூறப்பட்டது. அவ்வாறு பார்த்தால் சுமார் 50மூ காணிகளே திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் மேலும் 50மூ திரும்பக் கையளிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. கௌரவ முதலமைச்சர் தம்வசம் இருக்கும் காணி பற்றிய ஆவணமொன்றை கௌரவ அமைச்சருக்கு  அனுப்புவதாக கூறி வேறு கூட்டமொன்றுக்கு சென்றார். கூட்டம் மேலும் தொடர்ந்தது” - என்றுள்ளது.

No comments