Header Ads

test

அவகாசம் கேட்கிறார் அஸ்மின்!


1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறும் வரையில் அவர்களுடைய கொடுப்பனவுகள் நிறுத்தப்படகூடாது. அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார். 

வடமாகாண சபையில் ஊதியம் பெற்றுக் கொண்டு வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்கள், வடமாகாணத்திற்குள் சேவையாற்ற வரவேண்டும். இல்லையேல் அவர்களுக்கான ஊதியத்தை வடமாகாணசபை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வடமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியிருந்தார்.

வடமாகாண சபையின் 123வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது வடமாகாண சபையில் ஊதியம் பெற்றுக் கொண்டு வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக மாகாண முதலமைச்சரிடம் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா வாய்மொழிமூல கேள்வி ஒன்றை கேட்டிருந்ததுடன், பிரேரணை ஒன்றையும் சபைக்கு சமர்பித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

எதிர்கட்சி தலைவருடைய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் வடமாகாணத்திற்கு வெளியே 68 முன்பள்ளிகளில் பணியாற்றும் 90 ஆசிரியர்களுக்கு வடமாகாணசபை ஊதியம் கொடுப்பதாகவும் இந்த கொடுப்பனவுகள் முன்னாள் ஆளுநர் சந்திரசிறியினால் அங்கீகரிக்கப்பட்டு 2011ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் யூன் மாதம் 31ம் திகதியுடன் அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என ஆசிரியர்களுக்கும், முன்பள்ளிகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.  

இதன்போது கருத்து தெரிவித்த அஸ்மின் 1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கே அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறும் வரையில் அவர்களுடைய கொடுப்பனவுகள் நிறுத்தப்படகூடாது. அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும். என கேட்டிருந்தார். 

No comments