Header Ads

test

பல கோடியில் கட்டடங்கள்:விடுவிக்க முடியாதென்கிறது இராணுவம்!


முல்லைத்தீவு - கேப்பாபுலவில், பல கோடி ரூபாய் செலவில், இராணுவ முகாம் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடைத்துத் தள்ளிவிட்டு, வேறு இடங்களுக்கு இடம்பெயரும் போது, மேலும் பலகோடி ரூபாய்களைச் செலவிட நேர்வதால், இராணுவத்துக்குப் பாரிய நட்டம் ஏற்படுவதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.  

இதனால் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியமில்லையென சொல்லப்படுகின்றது. 

குறித்த முகாம் அமைந்துள்ள காணியில் குறிப்பிடத்தக்களவு நிலப்பரப்பு, பொதுமக்களுக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற போதிலும், அக்காணி உரிமையாளர்களுக்காக, மாதிரிக் கிராமத்தில் காணியுடன் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது.இந்நிலையில், முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பதற்கான சாத்தியமில்லையெனத் தெரிவிக்கும் இராணுவம், குறித்த காணிகளின் உரிமையாளர்களில் சிலர், அவற்றை இராணுவத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வாதிட்டுவருகின்றது. 

ஆயினும் குறித்த மாதிரி குடியிருப்பு அருகாகவுள்ள காடுகளை அழித்தே அமைக்கப்பட்டுள்ளது.வாழ்வாதார உதவிகள்,வயல்,தோட்ட நிலங்கள் அனைத்தும் படையினர் வசமிருக்கின்ற நிலையில் எவ்வாறு உயிர்வாழ்வதென போராடுகின்ற மக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இராணுவ முகாமுக்கு முன்னால் கேப்பாபுலவு மக்களால் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றுடன்  506 ஆவது நாளைக் கடந்த நிலையில், அத்துமீறித் தமது காணிகளுக்குள் நுழையவேண்டிய நிலைமை ஏற்படுமென, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எச்சரித்துள்ளனர்.  

தமது பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை, தமது போராட்டம் தொடருமென்றும் தமது காணிகளுக்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்படும் விபரிதங்களுக்கு, அரசாங்கமும் அரசியல் தலைமைகளும், சர்வதேசமுமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments