Header Ads

test

தொடர்கின்றது மல்லாகம் பதற்றம்!

யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து காவல்துறையின் தேடுதல் வேட்டையால் ஏழாலை மற்றும் குளமங்கால் பகுதிகள் இயல்புபாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை காவல்துறையால் தேடப்பட்டு வந்த 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலை அடுத்து , இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். 


குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இளைஞன் உயிரிழந்ததை அடுத்து குழப்பங்களில் ஈடுபட்டவர்கள் என 40 பேரை கைது செய்வதற்கு இலக்கு வைத்து தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம் குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 இளைஞர்களும் காவல்துறை காவலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இதனிடையே யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் சிங்கள மொழியில் பதியபட்டமையை மனித உரிமை ஆணைக்குழு அறிந்து , தமிழ் மொழியில் வாக்கு மூலம் பதியப்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாகது என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்கு மூலங்களை பொலிசார் சிங்கள மொழியிலையே பதிவு செய்துள்ளனர். அதனால் வாக்கு மூலங்களை வழங்கியவர்களது , கூற்றுக்கும் பதியப்பட்டவைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன. அதனை அடுத்து வாக்கு மூலங்களை தமிழ் மொழியில் பதியுமாறு அறிவுறுத்தியுள்ளோம். 

அதேவேளை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் சென்று அவதானித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளோம்.  

சம்பவத்தினை நேரில் கண்டவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் சுன்னாகம் காவல் நிலையத்திற்குச் சென்று துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் வெளி சென்றமை , உள் வந்தமை ,  துப்பாக்கி எடுத்து சென்றமை தொடர்பில் தகவல் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளதா ? என்பது தொடர்பிலும் தகவல்களை பெற்றுள்ளோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments