Header Ads

test

அலுவல் முடிந்து அலரி மாளிகை போனார் ரணில்!


தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருக்கும் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், 600 ஏக்கர்களை கையளிப்பதற்காகவே இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருப்பதாக தமிழரசுக்கட்சி பத்திரிகையான உதயன் மேற்கொண்ட பரப்புரை பொய்த்துள்ளது.வெறுமனே சுற்றிப்பார்க்கின்ற நிகழ்வாகவே மட்டும் ரணிலின் நிகழ்வு அமைந்திருந்தமையால் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதனை புறக்கணித்தமை வரவேற்பை பெற்றுள்ளது.

காணி விடுவிப்பினை இலங்கைப் படையினர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோருடன் மேலும் கலந்துரையாடிய பின்னரே, காணிகளை கையளிக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க, யாழ் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியிருக்கிறார். 

இலங்கை முப்படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக யாழ் செயலகத்தில், அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில், முப்படை உயர் அதிகாரிகளுடன் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், பிரத்தியேகமாக இடம்பெற்ற கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

மூடிய அறையில் அந்தக் கூட்டம் நடைபெற்றது எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், ஆகியோருடன் பிரதேச செயலாளர்களும் கொழும்பில் இருந்து சென்ற அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டனர்.

காணிகளைக் கையளிப்பது தொடர்பாக முப்படை உயர் அதிகாரிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். அபகரித்த காணிகளை மக்களிடம் கையளிப்பது குறித்து, அந்த மூடிய அறைக்குள் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது குறித்து ஊடகங்களுக்கு எதுவும் கூறப்படவில்லை.

அதேவேளை, யாழ் செயலகத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில், இலங்கையின் முப்படையினரும் அபகரித்த, காணிகளின் விபரங்கள், மக்களுக்கு தேவையான விடயங்கள் குறித்து, ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அரச அதிபர் வேதநாயகன் விளக்கமளித்தார்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான அரசியல் சூழலிலும், இதுவரை யாழ் மாவட்டத்தில் 4,436.44 ஏக்கர் காணிகள், முப்படையினரின் கட்டுபாட்டில் இருப்பதாகவும் 580 குடும்பம் 24 நலன்புரி முகாமில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் வேதநாயகன் கூறியுள்ளார்.

3,801.5 ஏக்கர் காணிகள் மாத்திரமே இதுவரை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் மயிலிட்டி காச நோய் வைத்திசாலை முழுமையாக கையளிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


இவ்வாறு யாழ் மாவட்டத்தில் முப்படையினரின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நீண்ட விளக்கமளிக்கப்பட்டபோது, பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து முப்படைத் தளபதி என்ற அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச வேண்டும் என்றும், முப்படை உயர் அதிகாரிகளின் இணக்கம் பெறப்படுவது அவசியம் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தின்போது காணிகள் எதுவும் கையளிக்கப்படவில்லை எனவும் வெறுமனே அரசியல் செயற்பாடுகளில் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டார் .

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு, யாழ் செயலகத்தில் கலந்துரையாடி, செய்ய வேண்டியதை செய்யாமல் வெறுமனே தேநீர்கடைகளிலும். வீதிகளிலும் மக்களைச் சந்தித்து அரசியல் நாடகம் ஒன்றை, ரணில் விக்கிரமசிங்க நடத்தியிருந்தார்.
அதேவேளை இலங்கை அரசின், ஒற்றையாட்சியின் கீழான மாகாண சபைகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத நிலையில், இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திப்பதில் பயன் இல்லையென வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் சமீபத்தில் கூறியிருந்தார்.


இதன் காரணத்தில், ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டபோதும், சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையெனவும், யுத்தத்தின் பக்க விளைவுகளுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்ற அடிப்படையிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகஜர் ஒன்றை ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது அதிகாரிகள் மூலமாக ஒப்படைத்துள்ளார்.

No comments