Header Ads

test

பட்டதாரிகள் நியமனம் அரசியல் நியமனமா - யாழ் பட்டியலில் பிக்குவின் பெயர் ?


சிறிலங்கா பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் வழங்கப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம், முற்றிலும் அரசியல் நியமனமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த நியமன விவகாரத்தில்,யாழ் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் பெரும் குழறுபடி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தராக யாழில் இருந்த பௌத்த பிக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நியமன பட்டியலில் 331வது பெயராக, யாழ் ஆரியகுளத்தில் அமைந்துள்ள நாகவிகாரையிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 1990 இல் பிறந்த இந்த பௌத்த பிக்குவிற்கு அரச நியமனம் யாழ்ப்பாண பட்டியலில் வழங்கப்படுகின்ற போதும், அவரை விட அதிக வயதுள்ள பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த நியமன விவகாரத்தில், அரசியல் தலையீடுகள் புகுந்து விளையாடுகின்றன என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமான சம்பவங்கள் நேற்று நடைபெற்றன. அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பட்டியல் நேற்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகி, சிறிது நேரத்திலேயே அது அகற்றப்பட்டு விட்டது.

அந்த பட்டியலில் மாத்தறை- 193, களுத்துறை- 281, ஹம்பாந்தோட்டை- 130, கேகாலை- 163, யாழ்ப்பாணம் 334, மட்டக்களப்பு- 380, கொழும்பு- 171, இரத்தினபுரி- 236, மொனராகலை- 68, மாத்தளை- 79, கம்பஹா- 331, கண்டி- 224, காலி- 237, வவுனியா- 80, குருணாகல- 311, நுவரெலியா- 52, பதுளை- 139, அனுராதபுரம்- 107, புத்தளம்- 77, திருகோணமலை- 64, கிளிநொச்சி- 71, முல்லைத்தீவு- 73, மன்னார்- 126, அம்பாறை- 101, பொலனறுவை- 23 பேர் நியமனம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் பல குழறுபடிகள் இருப்பதாக பல தரப்பிலிருந்தும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இலங்கை பல்கலைகழக பட்டதாரிகளிற்கே அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படுமென அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தபோதும், வெளிவாரி பட்டதாரிகள் கணிசமான உள்ளீர்க்கப்பட்டிருந்தார்கள்.

வடக்கு, கிழக்கு நியமனங்களில் வேலைவாய்ப்பு பொதுகொள்கையொன்றை அரசாங்கம் கடைப்பிடிக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படும் விதமாக, பல்கலைகழகத்திலிருந்து நீண்டகாலத்தின் முன் வெளியேறியவர்களை விட, அண்மையில் வெளியேறியவர்கள் அதிகளவில் இணைக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே அரச சேவையில் இருக்கும் சிலரும் இந்த பட்டியலில் இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை பகுதி நியமனங்களில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அனைத்து மாவட்டச் செயலங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளுக்குப் புறம்பாக அந்ததந்த மாவட்டங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் மாவட்டக் காரியாலயங்களில் தமது ஆதரவாளர்களுக்கிடையில் பிறிதானதொரு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அந்தப் பெயர்ப்பட்டியல்களும் குறித்த அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததான தகவல்கள் வெளிக்கசிந்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் இப் பொறுப்பினை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் விஜயகலா மகேஸ்வரனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனும் முன்னின்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments